ஞானியவள்
முழுதும் துறந்தவள் ?
ஞானப் பிள்ளைக்காய்
தவம் செய்தாள்.
விரித்த மஞ்சங்கள்
புலராத வேளையில்
யுகம் யுகமாய் . . .
அட்சய பாத்திரம் !
பெருகிக் கொண்டிருக்கும்
பொன் வயல்கள்
எத்துனை . . .
அறுவடைகள்.
அழுக்கேறிய
பிச்சைப் பாத்திரம்
சுவையரும்புகள்
சிதைந்து விட்டனவே !..
துளிர்ந்த அரும்புகள்
தழைக்கும் முன்னமே . . .
கிள்ளி விடும்
‘பெரிய’ மனிதர்
‘யோகி’ யாக்கியவர்கள்
‘ஞானம்’ பெற
விழைகிறார்கள் . . .
தீர்க்க தரிசனம் தொடர்கிறது .
இவளோ !
போதி மரம் விட்டு
போதைக் கரம் தாவி
ஞானம் வேண்டி
வேள்வி நடத்துகிறாள் . . .
தீர்வை முடியவில்லை
தினமும்தான்
தியானங்கள் தொடர்கின்றனவே!..
( பின் குறிப்பு )
எலும்பில் குடிகொண்ட
‘பாஸ்பேட்டு’ தாதுக்கள்
எரியும் சுவாலையில் . . .
‘கொள்ளிவாய்ப் பிசாசுகளாய்’
பிறவி யெடுக்கும் வரை
அவள்
‘சர்வேகல்’
பெருகிக் கொண்டேதானிருக்கும்
அக்கினிச் சுவாலையில்
மெழுகாய் ஒளிரும்
மெய்யான ஞானி !
ஞானம் பெறுவதெப்படி ?...
மு. ஆ. பீர்ஓலி.
20.09.2011
No comments:
Post a Comment