என் இதய
சாம்ராஜ்யத்தின்
கனவு தேவதையே ! . .
ஆதவனின் ஆதிக்கம்
சுருண்ட பின்
இந்த மனத் தோட்டத்தில்
அரும்பிடும். . .
கனவு மலர்களே ! . .
நீ . . .
விதைத்த
நடசத்திர அரும்புகள்
நிலவாக மலர்ந்த பொழுது
என் . . .
இமைக் கூட்டுக்குள்
நளினமாடும்
பார்வைகளின் அசைவுகள்
உதிர்த்த . . .
மந்திர வார்த்தைகள்
மயக்கும் வர்ணங்களாய்
மனோகரத்துவம் . . .
அழகின் அசைவுகள்
சங்கீதம்
இசைத்துக் கொண்டிருக்க . . .
எங்கோ ! . .
தொலை தூரத்தில்
‘இராப் பிச்சைக்காரனின்’
ஈனக் கதறல்கள்
சாக்காட்டு அமைதியில்
சமாதியாகிக் கொண்டிருக்கிறதே ! . .
உன்னுடைய
அரும்புகள் . . .
துளிர்த்துக் கொண்டிருக்கும் பொழுது
அவன் மலர்கள்
கருகிக் கொண்டிருக்கிறதே ! . .
ஒ . . .
கனவு தேவதையே ! . .
என்னை
வதைத்துக் கொண்டிருக்கும்
சொர்க்கபுர நாயகியே ! . .
உந்தன்
கண்களுக் கெதிரிலேயே . . .
சிதைந்து கொண்டிருக்கும்
அவன் வாழ்வு
புலரும் வரை . . .
என்
மனத் தோட்டத்தில்
பார்வைகள்
விதைத்து சென்ற
காதல் அரும்புகளை
மலரவிடப் போவதில்லை. . .
மு. ஆ. பீர்ஓலி.
23.09.2011
Very Nice
ReplyDelete