கருமேகக் கூட்டங்கள்
உன் மதி முகத்தை
சூழ்ந்து . . .
சிறை செய்தாற்போல்
என் இமைக் கரங்கள்
கரு விழியை
கண்ணிவைத்துப் பிடிப்பதற்கு
அப்பப்பா. . .
கயல்கள் இரண்டும்
விழித் தூண்டில்களில்
அகப்படாமல்
மேவிடும் அலையாய்
இமைக் கோட்டையில்
இன்ப ஊற்றுக்களில்
கிளித்தட்டு ஆடுகின்றன.
கனியிதழ் பிழியும்
மதுரச தேக்கத்தில்
மதி மயங்கி. . .
மயங்கி. . .
உன்னில்
எனையிழந்து
என்னில் உனைத்தேடி !. . .
மதுரவாய் மலர்ந்து
மகரயாழ் மொழி பேசி. . .
காதல் மலர்கள்
கனவுக் கோட்டையில்
நித்தில கீதமாய். . .
நீங்கா நினைவு.
கனியில் தேன் கலந்து
கரும்பில் பால் சேர்த்து
இனிமை மொழியினளாய்
தனிமையில்
துதிபாடும் தூயவளே ! . .
என்னருகே
நீயிருந்தால்,
தென்றலாய்
வந்து. . .
மனத் தேக்கத்தில்
சலசலக்கும். . .
நீரலைகள்
காவியமாய்
எழில் கூந்தல்
குடிகொள்ளும்
மனிமாலை தொடுத்திடும்.
தேன் சுவையும்
பாலும்
நல் அமுதும்
தெவிட்டுதம்மா. . .
விழிக் கருவூலங்கள்
உதிர்க்கும் தத்துவங்கள்
உணரவில்லை
உணர்த்தாயோ ! . .
தத்துவப் பேழை
தவழ்ந்து வரும் தாரகை ! . .
பிள்ளை மொழிக் கேட்க
கொள்ளை ஆசைதான்
இல்லை யென்பாயோ ?
இனியவளே ! . .
இதயத்து சோலையில்
உதயத்தின் சீதனமாய்
பனிப் பூ பஞ்சணையில்
படரும் செண்பகமே ! . .
உன்-
இமைகள் படபடக்க
இதழ்கள் துடிதுடிக்க
கடைக் கண்ணால்
நாண. . .
நகை யுதிர்க்கின்றாய்
நிலவாக குளிர்ந்தேன்
தென்றலாய் வந்தாய் !
பகலாய் காய்ந்தேன்
உன்னைப் பிரிந்து.
துள்ளும் மான்
துடிக்கும் மீன்
தழுவும் தென்றல்
தழைக்கும் பூங்கொடி.
எங்கு சென்றிட்டாய் ? . .
எந்தன். . .
இதய தாரகை நீ
என்னுள்ளே. . .
குடியிருப்பாய்
என்னை கொள்ளையிட்டு,
மு. ஆ. பீர்ஒலி
05.10.2011
No comments:
Post a Comment